பிரதமர் நரேந்திர மோடி வருகையொட்டி, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 11) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்பட பல கலந்துகொள்ள உள்ளனர்.
பிதமர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விழாவுக்காக 11 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து 3 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் அருகே உள்ள அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு இறங்கு தளத்துக்கு மாலை 4 மணியளவில் வந்து இறங்குகிறார்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
என்.எஸ்.ஜி என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு?
விமான நிலைய உள் வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு புதன்கிழமை முதல் 3 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பல்கலைக்கழக நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மீண்டும் ஹலிகாப்டரில் புறப்பட்டு மதுரை வருகிறார். அங்கிருந்து விமானத்தில் விசாகப்பட்டினம் செல்கிறார்.
இதனிடையை, வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 11 முதல் மாலை 5 மணி வரையிலும் மதுரை - திண்டுக்கல் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.