கோவை: தண்டவாளத்தில் சிக்கிய லாரி.. 100 மீட்டரில் ரயில் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்ப்பு!

கோவை துடியலூர் ரயில்வே கேட் பகுதியில் நேற்று இரவு மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் வந்த நேரத்தில் தண்டவாளத்தின் நடுவே சரக்கு லாரி சிக்கி பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: தண்டவாளத்தில் சிக்கிய லாரி.. 100 மீட்டரில் ரயில் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்ப்பு!

கோவை துடியலூர் ரயில்வே கேட் பகுதியில் நேற்று இரவு மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் வந்த நேரத்தில்  தண்டவாளத்தின் நடுவே சரக்கு லாரி சிக்கி பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக லாரிக்கு 100 மீட்டர் முன்னதாக  பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கோவை - மேட்டுப்பாளையம் இடையே ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த 2 மாதங்களாக புதிதாக தண்டவாளங்களை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட்டுள்ள தண்டவாளங்கள், ஏற்கெனவே இருந்த தண்டவாளத்தின் உயரத்தைவிட ஒரு அடி வரை உயரமாக உள்ளதால், ஏற்கெனவே போடப்பட்டிருந்த தார்சாலை தாழ்வாக மாறியுள்ளது.

இதனால், அவ்வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பல இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் கார்களின் அடிப்பகுதி தண்டாவாளங்களில் உரசி சேதமடைகின்றன. அதேபோல் அதிக பாரத்துடன் வரும் லாரிகள் தண்டவாளங்களை கடக்க முடியாமல் பழுதடைந்து அங்கேயே நிற்கின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயிலுக்காக துடியலூர் ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் அவ்வழியாக சுமார் 30 டன் எடையுள்ள சரக்கு ஏற்றி வந்த லாரி தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது தண்டவாள உயரம் காரணமாக தண்டவாளத்தை கடக்க முடியாமல் அப்படியே தண்டவாளத்தின் நடுவே பழுதாகி நின்றுவிட்டது.

அந்த நேரம் வந்த கோவை மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலுக்கு கேட் கீப்பர் உடனடியாக சிவப்பு விளக்கை காண்பித்து லாரிக்கு 100 மீட்டர் முன்பாக ரயிலை நிறுத்தினார். இதன் காரணமாக லாரி மீது ரயில் மோதும் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் லாரியை தண்டவாளத்தில் இருந்து தள்ளி நகர்த்த முற்பட்டனர். ஆனால் லாரியில் 30 டன் அளவிற்கு சரக்கு இருந்ததால் 1 மணி நேரம் கடந்தும் நகர்த்த முடியவில்லை. இதையடுத்து லாரியின் பின் பக்கத்தில் இருந்து மற்றொரு டெம்போ மூலம் தள்ளி தண்டவாளத்தில் இருந்து லாரியை பொதுமக்கள் நகர்த்தினர்.

உடனடியாக ரயில்வே கேட் மூடப்பட்டு அங்கி காத்திருந்த பயணிகள் ரயில் 1 மணி நேர தாமதத்திற்கு பின் கோவை நோக்கி புறப்பட்டு சென்றது. இதே ரயில்வே கேட் பகுதியில் ஏற்கெனவே  தண்டவாள உயரம் காரணமாக 3 லாரிகள் தண்டவாளத்தில் நடுவே பழுதாகி நின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, உடனடியாக தண்டவளத்தின் உயரத்திற்கு ஏற்றவாறு சாலையின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com