வேலூரில் அரசு மருத்துவமனை அலட்சியத்தால் பிறந்த குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகர் மாங்காய் மண்டி முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் கூலி வேலை செய்யும் கரண் (25) - சிவசக்தி (23) தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் சிவசக்தி கருவுற்று தற்போது 9-வது மாதம் பிரசவ வலி ஏற்பட்டு மக்கான் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் பழைய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிவசக்திக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் சற்று நேரத்திலேயே உயிரிழந்துள்ளது.
தாங்கள் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவர்கள் யாரும் இல்லை, 1 மணி நேரம் காத்திருந்ததாகவும் முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உயிரிழந்த குழந்தையின் உடலுடன் சிவசக்தியின் உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் துறை, மருத்துவத் துறை நடத்திய தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலூர் தெற்கு காவல் நிலையத்திலும், வேலூர் மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குனரிடமும் புகார் அளிக்கப்பட்டது. புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து 2 மணி நேர முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.