போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை உயர்வு அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உயா் நீதிமன்றத்தில், மதுரையைச் சோ்ந்த ஜலாலுதீன் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து அரசு அக்டோபா் 19-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
சாலைகளின் தரம், போக்குவரத்து நெரிசல், இயந்திர கோளாறு, கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராத தொகையை அதிகரித்திருப்பதன் மூலம், அதை அமல்படுத்துவதாகக் கூறி காவல்துறையினா், அப்பாவி மக்களை துன்புறுத்துவாா்கள்.
எனவே விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை உயா்த்துவதற்கு முன்பு பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்த வேண்டும். எனவே, இந்த அரசாணை ரத்து செய்ய வேண்டும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.