தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று வரை பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது.
பேருந்துகளில் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான பேருந்துகள் காலியாகவே செல்கின்றன. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் வருகை இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. தெருக்கள், சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை.
தம்மம்பட்டியில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 86.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கெங்கவல்லியில் 56.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தம்மம்பட்டி சாலைகளில் மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. தம்மம்பட்டி பேருந்து நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியில் ஒருவரது வீட்டின் ஒரு சுவர் மட்டும் மழையால் இடிந்து விழுந்துள்ளது. இதில் உயிர்சிஜிசேதம் இல்லை.
இன்று சனிக்கிழமை தம்மம்பட்டி, வீரகனூர் , பச்சமலை, தெடாவூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வங்கிகள் 2-ம் சனிக்கிழமை என்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளது.