செம்மண் வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியின் போது, விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பூத்துறை கிராமத்தில், குவாரி ஒப்பந்தம் போடப்பட்டு, அளவுக்கதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அவரது மகன் பொன்.கெளதமசிகாமணி, உறவினா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு எம்பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பொன்முடி தாக்கல்செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த உத்தரவை ரத்து செய்து வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என பொன்முடி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆதாரங்களாக உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, அமைச்சர் பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.