12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வி தமிழில் அறிமுகம்: அமித் ஷாவுக்கு, அமைச்சர் பொன்முடி பதில்!

12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வியை தமிழில் அறிமுகம் செய்யப்பட்டதாக  மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வியை தமிழில் அறிமுகம் செய்யப்பட்டதாக  மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தமிழ்மொழி மிகவும் தொன்மையானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மொழியின் அருமையைத் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் தமிழ்வழியில் பாடத் திட்டங்களைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்” என மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா  நேற்று சென்னையில் நடைபெற்ற “இந்தியா சிமென்ட்ஸ்” நிறுவனத்தின் பவள விழாவில் பேசியிருக்கிறார்.

இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளை தமிழில் எழுதினால் அதிகம் பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதற்காக, 1997-2001-இல் தமிழ்மொழி, இலக்கிய வரலாறு, புவியியல், வரலாறு போன்ற பாடங்கள் தமிழில் தனித்தனியே தொகுத்து வெளியிட முடிவு எடுக்கப்பட்டு, முதல் முயற்சியாக தமிழ்மொழி வரலாறு வெளியிடப்பட்டது.

பள்ளிப்படிப்பில் 10-ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தமிழ் கட்டாயப்பாடம் எனத் திராவிட முன்னேற்றக் கழக அரசில்தான் சட்டமியற்றி, அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் வரை அங்கீகரித்தது.

கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நிதியுதவி அளிக்கும் திட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்முதலில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 1967-68-இல் அறிவிக்கப்பட்டு, அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ஆண்டிற்குத் தமிழ்வழியில் பயிலும் ஒரு மாணவருக்கு 900 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 

மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் இப்போது சுட்டிக்காட்டியுள்ள பொறியியல் பட்டப்படிப்பை முதன்முதலில் தமிழ்நாட்டில் மு.கருணாநிதி 2010-ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தி விட்டார். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொறியியல் படிப்பினைத் தாய்மொழியில் கற்க ஏற்பாடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டட (சிவில்) மற்றும் இயந்திரப் (மெக்கானிக்கல்) பொறியியல் படிப்புகளைத் தமிழில் அறிமுகம் செய்து, தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழில் பொறியியல் கல்வி இன்றும் நடைமுறையில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழில் பொறியியல் படிப்பு நடைமுறையில் உள்ளது.

தமிழில் பொறியியல் கல்வி படித்து பி.இ., பட்டம் பெற்ற தமிழக இளைஞர்கள் இன்றைக்குப் பொதுப்பணித்துறை, வீட்டுவசதி வாரியம், மெட்ரோ ரயில் திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பல துறைகளில் பொறியாளர்களாகவும், பல பன்னாட்டு நிறுவனங்களின் உயர்பதவிகளை அலங்கரிப்பவர்களாகவும்  பணியாற்றி வருகிறார்கள். ஏன், அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்ற செல்வி. ஐஸ்வர்யா அவர்கள்தான் 2020-ஆம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் (IAS) வெற்றி பெற்றுள்ளார்.


இதன் அடுத்தகட்டமாக, இப்போது 2022-23-ஆம் ஆண்டு முதல் பட்டயப் படிப்புகளிலும் மேற்காண் பாடப்பிரிவுகள் தமிழ்வழியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளன. அதற்காகப் பொறியியல் பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள் தமிழ்வழியில் வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல் பட்டப் படிப்பு சிவில், மெக்கானிக்கல் என்பதையும் தாண்டி, கணினி அறிவியல் பிரிவிலும் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழர் மரபும், தமிழரும் தொழில்நுட்பமும் நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்வழியில் பொறியியல் கல்வி தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு விட்டாலும், மருத்துவப் படிப்பு, அதாவது எம்.பி.பி.எஸ் தமிழில் கற்பதற்கும் வழி செய்யவும் இப்போது தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மூன்று பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எம்.பி.பி.எஸ் முதலாண்டு பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com