கனியாமூர் தனியார் பள்ளியில் வகுப்புகளை தொடங்க பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்த பெரியநெசலூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவி ஸ்ரீமதி (17), கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி முன்பு நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், பள்ளி பேருந்துகள், வகுப்புகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை தொடர்ந்து தற்காலிகமாக பள்ளி மூடப்பட்டன. பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பள்ளி மூடப்பட்டதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாகவும், விரைவாக பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்கவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், பள்ளி வளாகம் சீரமைக்கப்பட்டதால் பள்ளியில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் நேரடி வகுப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தார். பிற வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு தொடங்குவது குறித்து ஒரு மாதத்திற்கு பிறகு முடிவெடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும், பள்ளிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கவும், கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.