மேட்டூர் உபரிநீர் கால்வாயில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை நிரம்பிய பிறகு வரும் உபரி நீரை, அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி மூலம் வெளியேற்றப்படும். அவ்வாறு வெளியேற்றப்படும் உபரி நீர் கால்வாய் வழியாக சென்று சங்கிலி முனியப்பன் கோவில் அருகே மீண்டும் காவிரியில் கலக்கிறது.
மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அவ்வப்போது வரும் உபரி நீரானது, உபரி நீர் போக்கி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரிநீர் வெளியேறும் போது மேட்டூர் நீர் தேக்கத்தில் உள்ள மீன்கள் உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்டுகிறது.
உபரிநீர் நிறுத்தப்பட்டதும் கால்வாயில் உள்ள குட்டைகளில் தண்ணீர் தேங்கும். இந்த குட்டைகளில் அரஞ்சான், ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் இருக்கும்.
கடந்த இரண்டு நாள்களாக இப்பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. உபரிகால்வாய் குட்டைகளில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. சிறிய குட்டைகளில் அதிக அளவில் மீன்கள் இருப்பதாலும் வெப்பம் காரணமாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் செத்து மிதக்கலாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செத்து மிதக்கும் மீன்களை சிலர் அள்ளிச் சென்று விற்பனை செய்கின்றனர். இதேபோல் பலமுறை மீன்கள் செத்து மிதந்துள்ளன. அப்போது ஜிலேபி வகை மீன்கள் அதிக அளவில் செத்து மிதந்துள்ளன.
ஆனால் இன்று அரஞ்சான் மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆங்காங்கே மீன்கள் செத்து மிதப்பதால் உபரி நீர் கால்வாயின் இருகரைகளிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.