சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜைக்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலம் நாளை முதல் 41 நாள்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை மேல்சாந்தி திறந்துவைக்கிறார். அதன் தொடர்ச்சியாக மாலை 6 மணியளவில் அபிஷேகம் நடத்தப்பட்டு இரவு 10 மணியளவில் நடை அடைக்கப்படுகிறது. இதையடுத்து நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு இந்தாண்டுக்கான மண்டலக் காலம் தொடங்கும்.
ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முன்பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம். முன்பதிவு செய்யாத பக்தர்கள் கோயில் அருகே முன்பதிவு செய்ய சபரிமலை பாதையில் 13 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பக்தர்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒன்றை வைத்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு அதிகளவிலான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.