தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் புதன்கிழமை வெளியிட்டாா்.
அவரது அறிவிப்பு: சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கடலூா் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு அரசு சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிா்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளாக அவை இருக்கும்.
பேருந்துகளில் பயணிக்க ஆன்-லைன் (www.tnstc.in) மூலமாக முன்பதிவு செய்யலாம். பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 94450 14452, 94450 17793, 94450 14424, 94450 14463, 94450 14416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.