மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. மழை குறைந்ததால் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 21,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,500 கன அடியாகவும் இன்று காலை வினாடிக்கு 15,500 கன அடியாகவும் சரிந்தது.
நீர் வரத்து சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியிலிருந்து வினாடிக்கு 15,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 37- வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.