மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடை கார் நிறுத்த பகுதியில் நகைக் கடை பூட்டை உடைத்து அரை கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை காரமடை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை மாரியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் டைமண்ட் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தாமணி (43). இவர் காரமடை கார் ஸ்டேண்ட் பகுதியில் சோலையன் ஜுவல்லரி என்ற பெயரில் 13 ஆண்டுகளாக தனியாக நகைக் கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று வியாபாரம் முடிந்து வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் இன்று காலை கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் ஷட்டர் திறந்து இருப்பதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் சாந்தாமணிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சாந்தாமணி மற்றும் செந்தில் ஆகியோர் கடைக்கு உடனடியாக விரைந்து வந்து பார்த்துள்ளனர். அப்போது கடையின் பூட்டை உடைத்து கடையிலிருந்த அரை கிலோ எடைக்கு மேல் தங்க நகைகள், 6 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து காரமடை காவல்துறை ஆய்வாளர் குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கடையில் ஆய்வு செய்தனர்.
மேலும் கடைக்கு தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு இப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சாந்தாமணி கொடுத்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்நிலையம் அருகில் இருந்தும், கண்காணிப்பு கேமராக்கள் அதிகம் இருக்கும் என தெரிந்தும் இக்கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.