தனியார் மூலம் பணியிடங்களை நிரப்புவது குறித்து மறுபரிசீலனை: அமைச்சர் கே.என்.நேரு

மாநகராட்சி அடிப்படை பணியிடங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணை மறுபரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 
தனியார் மூலம் பணியிடங்களை நிரப்புவது குறித்து மறுபரிசீலனை: அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: மாநகராட்சி அடிப்படை பணியிடங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணை மறுபரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பாக 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பாராட்டு கேடையங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். மாவட்ட அளவில் சிறப்பாகப் பணியாற்றிய கூட்டுறவுப் பணியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் பயிர்க்கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மத்திய காலக்கடன், கால்நடை வளர்ப்பு கடன், சுய உதவி குழு கடன், வீட்டு வசதி கடன், வீட்டு அடமான கடன், சம்பளச் சான்று கடன், கைம் பெண்களுக்கான கடன் என 1365 பயனாளிகளுக்கு 8.90 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய அமைச்சர், 'தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலர்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.  நகராட்சி நிர்வாக துறையும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.

சென்னையில் இரண்டு இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியது. அதை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டோம். வருங்காலத்தில் அங்கும் பாதிக்கப்படாத வகையில் கால்வாய் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து இடங்களிலும் தற்காப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விவசாயப் பணிகளுக்கு யூரியா கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். அதுகுறித்து முதலமைச்சரிடமும், துறை அமைச்சரிடமும் பேசியுள்ளேன். விரைவாக யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டுறவு சங்களில் பழைய நிலையிலேயே கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் கூறியுள்ளார்.

திருச்சி காவேரி பால பராமரிப்பு பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் நிறைவடையும்.

மாநகராட்சி அடிப்படை பணிகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அந்த அரசாணையை மறுபரீசிலனை செய்வது குறித்து முதலமைச்சரிடம்  பேசிவிட்டு முடிவு செய்யப்படும். அடிப்படை பணிகள் முதல் அனைத்து பணியிடங்களும் அரசு பணிகளாகவே நிரப்ப முயற்சி செய்து வருகிறோம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com