மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் குழுவின் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை(நவ.21) நடைபெறுகிறது.
மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடை முறைப்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைவராக கொண்டு மாநில அளவில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த குழுவின் முதல் கூட்டம் கடந்த மே மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் திங்கள்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு தலைமை இருக்கிறார்.
இதையும் படிக்க | புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்பு
இக்கூட்டத்தில் மாவட்ட அளவில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்களில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகளை பொறுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையினை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் மனித வளங்களின் செயல்திறனை வரிசைப்படுத்தி மதிப்பு ஆய்வு செய்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இருக்கும் தடைகளை நீக்கி விரைந்து சட்டங்களை செயல்படுத்துவது, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்துவது அல்லது நடுநிலைப் படுத்துவதற்கு உரிய திருத்தங்களை செய்யவதற்கான பரிந்துரைகள் வழங்குவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.