உசிலம்பட்டியில் தெருவில் கிடந்த 23 சவரன் நகை, 4 லட்சம் முன் வைப்பு தொகைக்கான பத்திர ரசீதை எடுத்து வங்கி உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்த முதியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியர் சின்னச்சாமி, இவர் 23 சவரன் நகை மற்றும் 4 லட்சம் முன் வைப்புதொகைக்கான பத்திர ரசிது, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புத்தகம் உள்ளிட்டவற்றை துணிப்பையில் வைத்து கொண்டு வங்கியில் லாக்கரில் வைப்பதற்காக இருசக்கர வாகனம் மூலம் உசிலம்பட்டி வருகை தந்துள்ளார்.
இதையும் படிக்க.. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அவசியமா?
இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வரப்பட்ட துணிப்பை பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் கீழே தவறி விழுந்தது. இந்நிலையில் அவ்வழியாக நடந்து வந்த காந்தி விடுதி அருகே குடியிருக்கும் நாகராஜ் என்ற முதியவர் துணிப்பையை எடுத்து அதில் இருந்த மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புத்தகத்தை அடையாளமாக கொண்டு கூட்டுறவு வங்கி வந்து வங்கி மேலாளர் சிவக்குமாரிடம் 23 சவரன் நகை மற்றும் பாண்ட் ரசீதை ஒப்படைத்தார்.
வங்கி மேலாளர் சிவக்குமார, தங்களது வாடிக்கையாளரும், நகையை தவறவிட்டு தேடிக் கொண்டிருந்தவருமான சின்னச்சாமியை அழைத்து அவரிடம் நகை மற்றும் பாண்ட் ரசீதை பத்திரமாக ஒப்படைத்தார்.
கீழே கிடந்த 23 சவரன் நகை மற்றும் 4 லட்சத்திற்கான பாண்ட் ரசீதை வங்கியின் உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்த முதியவர் நாகராஜை பலரும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.