சென்னை - மைசூரு செல்லும் வந்தே பாரத் பயணிகள் ரயிலுக்கு முதல் 10 நாளில் பொதுமக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே நவ.12-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. வாரத்தின் 6 நாள்கள் இயக்கப்படும் (புதன்கிழமை தவிர) இந்த ரயில், பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நவ.12 முதல் 22-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மைசூரு (வண்டி எண்.20607) சென்ற ரயிலில் சொகுசு வகுப்பு சராசரியாக 147 சதவீதமும், குளிரூட்டப்பட்ட இருக்கை வகுப்பு சராசரியாக 115 சதவீதமும் நிரம்பின.
இதேபோல், நவ.12 முதல் 22-ஆம் தேதி வரை மைசூரில் இருந்து சென்னை (வண்டி எண்.20608) சென்ற ரயிலில் சொகுசு வகுப்புகளில் சராசரியாக 125 சதவீதமும், குளிரூட்டப்பட்ட இருக்கை வகுப்புகளில் சராசரியாக 97 சதவீதமும் நிரம்பின.
இந்த ரயில் வேலூா் மாவட்டம், காட்பாடி, பெங்களூரில் நின்று செல்கிறது. இடை நிறுத்தங்களில் இறங்கி ஏறும் பயணிகளின் அடிப்படையிலும், பயணம் செய்த மொத்த பயணிகள், இருக்கை வசதி அடிப்படையிலும் சதவீதம் கணக்கீடப்பட்டுள்ளது.