சேலம் அரியானூரில் ஹோட்டல் அதிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக பரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி(55). இவரது மனைவி ஆனந்தி இவருக்கு பிரியா என்ற மகளும், நாகராஜ் என்ற மகனும் உள்ளனர்.
கந்தசாமி அரியானூர் பகுதியில் உள்ள ஒருதபா ஹோட்டலை வாடகைக்கு எடுத்துள்ளார். ஹோட்டலில் மராமத்து பணிகள் மற்றும் பெயிண்ட் அடிக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.
ஹோட்டலை விரைவில் திறப்பதற்கான வேலைகளில் கந்தசாமி ஊழியர்களுடன் இரவு பகலாக வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் பரோட்டா மாஸ்டராக சேர்ந்து ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதன்கிழமை இரவு மாஸ்டர் ஜோசப் ஹோட்டலில் இருந்த பிரிட்ஜை கீழே தள்ளி உடைத்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த கந்தசாமி ஏன் உடைக்கிறாய் எனக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த ஜோசப் கீழே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து கந்தசாமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே கந்தசாமி இறந்தார்.
இறந்த கந்தசாமியின் உடலை தார்பாயில் சுற்றி அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் வீசி சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்த ஜோசப் கந்தசாமியின் மகன் நாகராஜுக்கு உங்கள் தகப்பனாரை நான்கு பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்து ஓடிவிட்டது என தகவல் தெரிவித்து போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் பதறிப்போன மகன் ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
ஆய்வாளர் அம்சவள்ளி, சேலம் ரூரல் டிஎஸ்பி தையல் நாயகி இருவரும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பரோட்டா மாஸ்டர் ஜோசப்பை போலீசார் கைது செய்துள்ளனர்.