தமிழகத்தை உலுக்கிய திருச்சி இரட்டைக் கொலை: இருவருக்கு இரட்டை ஆயுள் 

திருச்சியில் தொழிலதிபர் உள்ளிட்ட இருவர் கொலையான வழக்கில், பெண் உள்ளிட்ட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..

திருச்சி: திருச்சியில் தொழிலதிபர் உள்ளிட்ட இருவர் கொலையான வழக்கில், பெண் உள்ளிட்ட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் துரைராஜ். அவரது கார் ஓட்டுநர்  சக்திவேல். இருவரும் கடந்த 2007 ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி, திருச்சி - திண்டுக்கல் சாலையில் மணப்பாறை அருகே வையம்பட்டி பகுதியில் காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக முதலில் வையம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். துப்பு எதுவும் துலங்காததால் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி தலைமையில் போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சாமியார் கண்ணன் (55), அவரது காதலி யமுனா, யமுனாவின் தாயார் சீதாலட்சுமி ஆகிய மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

யமுனாவுடன் சாமியார் கண்ணனுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் தொழிலதிபர் துரைராஜ் யமுனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதால், கள்ளக்காதல் போட்டி காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கு திருச்சி 2 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் நோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யமுனாவின் தாயார் சீதாலட்சுமி  மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து மற்ற இருவர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.வழக்கு தொடர்பாக சுமார் 140 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு துணை காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அரசு மருத்துவர் உள்ளிட்ட 80 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். 

இரு தரப்பு விவாதம் கடந்த 12ம் தேதி முடிந்த நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் சாமியார் கண்ணன் மற்றும் யமுனா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் இருவருக்கும் இரட்டை ஆயுள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பு அளித்தார். இந்த இரட்டை ஆயுள் தண்டனையை அவர்கள் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில்  குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞர் ஏ. ராஜேந்திரன், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஓம் பிரகாஷ் மற்றும் மனோகர் ஆகியோர் ஆஜராயினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com