மன்னார்குடியில் இரவு நேரங்களில் வேலை முடிந்து சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளில் இருந்து பேட்டரிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வருவதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இரவு நேரங்களில் வேலை முடிந்து சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளில் இருந்து பேட்டரிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகிறது. இதேபோன்று, மன்னார்குடி கீழப்பாலம் அருகே திருத்துறைப்பூண்டி சாலை பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளில் உள்ள பேட்டரிகளை கடந்த பல மாதங்களாகவே மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் திருட்டை தடுக்க முடியவில்லை.
இந்நிலையில், லாரி ஓட்டுநர்கள், வெள்ளிக்கிழமை காலை வந்து பார்த்தபோது ஒரே இரவில் ஆறு லாரிகள் மற்றும் ஒரு ஜேசிபி இயந்திரத்தில் இருந்த பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர்கள் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு வந்த உரிமையாளர்கள், ஓட்டுநர்களுடன் இணைந்து மன்னார்குடி திருத்துறைப்பூண்டி சாலையில் மரக் கழிவுகளை போட்டு தடுப்பு ஏற்படுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மன்னார்குடி காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், மறியலில் ஈடுப்பட்டவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இது குறித்து, புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டு செயலில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.