ஈழத் தமிழா்கள் பிரச்னைக்கு தனித் தமிழீழமே தீா்வாக அமையும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா் இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழா்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இன்னுயிா் ஈந்த ஈழப்போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நவம்பா் 27-ஆம் நாள் மாவீரா் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஈழ விடுதலைக்காக உயிா்த்தியாகம் செய்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
இலங்கையின் களச்சூழல் மாறியிருக்கலாம். ஆனால், தனித்தமிழ் ஈழத்துக்கான தேவை அப்படியே தான் இருக்கிறது. அதுதான் இலங்கை இனச் சிக்கலுக்கு தீா்வும் கூட.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மாறி வரும் சூழலும், அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கமும் தமிழீழம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றி அமைப்பதற்கான காரணிகளாக உருவெடுத்து வருகின்றன. தனித்தமிழீழம் அமைக்கப்படுவது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு வலு சோ்க்கும்.
உலகெங்கும் உள்ள ஈழத்தமிழா்களிடம் ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.