எறையூர் சிப்காட் தொழில் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 
எறையூர் சிப்காட் தொழில் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, இத்தொழில் பூங்காவில் அமையவுள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதரத்தை வலுவடையச் செய்து வருகிறது.

முதல்வர் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் 2022-23-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு, முதல்வரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தோல்பொருட்கள் துறையில், தமிழ்நாடு பாரம்பரிய பெருமையை கொண்டுள்ளது. உலகளவில் தோல் இல்லாத காலணிகளின் நுகர்வும், விளையாட்டு காலணிகளுக்கு நுகர்வோர் விருப்பமும் அதிகளவில் உள்ளது. மேலும், இத்துறையில் அதிக வளர்ச்சி மட்டுமின்றி, மிகப்பெரிய ஏற்றுமதி சாத்தியக் கூறுகளும் உள்ளன. அத்துடன் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையாகவும் இத்துறை விளங்குகிறது.

இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, முதல்வரால் 23.8.2022 அன்று துறை சார்ந்த காலணிக் கொள்கை வெளியிடப்பட்டது. காலணிக் கொள்கையின் கீழ், காலணி உதிரி பாகங்களின் தொகுப்பு உற்பத்தி நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க உயர்வு அடையாளம் காணப்பட்டு, அதில் கவனம் செலுத்தப்பட்டு, மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காலணி உற்பத்தி செய்யும் தொகுப்பு தொழில் நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஏற்கனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் ஒரு காலணி பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், எறையூர் இரண்டாவது காலணி பூங்காவாக இருக்கும்.

இதன் தொடர்ச்சியாக, குறுகிய காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.

காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்திக்கான தனிக் கொள்கை வெளியிடப்பட்ட 23.8.2022 அன்று கோத்தாரி ஃபீனிக்ஸ் அக்கார்டு நிறுவனத்துடன் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. அதன் மூலம், 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.

இன்று முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொகுப்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக ரூ.740 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 4,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது. ஆக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.2,440 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன், 29,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாக்கப்படவுள்ளது.

இந்த 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சேர்த்து, எதிர்காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமையவிருக்கும் தோல் அல்லாத காலணி மற்றும் அதன் தொகுப்பு தொழில் நிறுவனங்களின் மூலம் ரூ.5,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்றும், 50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதன் மூலமாக பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில், பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைவதுடன் மாவட்டத்தின் வளர்ச்சி மேலும் உயர்நிலை அடையும்.

இவ்விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ. சுந்தரவல்லி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ. வெங்கடபிரியா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, கோத்தாரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜின்னா ரஃபிக் அஹமத், எவர்வேன் நிறுவனத்தின் தலைவர் ராங் வு சேங், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com