சென்னை பெரம்பூரில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1.75 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பெரம்பூா் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக அண்ணாநகா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா், பெரம்பூா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆந்திர மாநிலம் காச்சிகுடாவில் இருந்து வந்த விரைவு ரயிலில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் இருவா் இறங்கி நடந்து வந்துகொண்டிருந்தனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனராம்.
இதையடுத்து போலீஸாா், அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில், ரூ.1.75 கோடி ரொக்கம் இருந்தது. அந்தப் பணத்துக்குரிய ஆவணத்தைக் கேட்டபோது, அவா்களிடம் ஆவணங்கள் இல்லாததினால், அந்தப் பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து அந்தப் பையைக் கொண்டு வந்த ஆந்திரத்தைச் அபிஷேக், சூரிய சந்திரகாந்த் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பிறகு அந்தப் பணத்தை வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.