சேலம்: பொங்கல், ஆங்கில புத்தாண்டு, நவராத்திரி விழா, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
நடப்பாண்டு நவராத்திரி விழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. அக்.4ம் தேதி ஆயுத பூஜை, 5ம் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்துக் கழக கோட்டங்களிலும் 5, 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலாண்டு தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. அதனால் இன்று முதல் 10ம் தேதிவரை காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலர் வெளியூர் செல்லத் திட்டுமிட்டுள்ளனர். இதையொட்டி சேலம் கோட்டம் சார்பில் சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்டம் சார்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறையும், 2ம் தேதி காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா என அடுத்தடுத்து விடுமுறைகள் வருகிறது.
இதையடுத்து பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய சேலம் மண்டலம், தருமபுரி மண்டலத்தில் இருந்து 300 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
அதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு, சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்பட பல ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு
வருகிறது. இந்த சிறப்பு பேருந்துக்கள் இயக்கம் 6ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.