கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் மூழ்கிய நிலையில் நீச்சல் தெரியாதவர்கள் யாரும் ஆறுகளில் இறங்க வேண்டாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த 54 பேர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா கோவிலுக்கு நேற்று சுற்றுலா சென்றனர்.
அப்போது பூண்டி செங்கரையூர் கொள்ளிடம் பாலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது ஆறு பேர் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர். இதில் 4 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில், தெர்மஸ் என்பவரின் உடல் இன்று காலை மீட்கப்பட்டது.
இந்நிலையில் காணாமல் போன 6 ஆவது நபரான ஈசாக்கை தேடும் பணி 2-வது நாளாக நீடிக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் 20-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் இதில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, மீட்கப்பட்ட 5 பேரின் உடல்கள் திருவையாறு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை பகுதிக்கு சுற்றுலா வருகிறவர்கள் நீச்சல் தெரியாவிட்டால் ஆறுகளில் இறங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
மேலும், தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மீண்டும் எச்சரிக்கை பலகை வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.