மெட்ரோ ரயில் பணியின் காரணமாக, ஆழ்வாா்பேட்டையில் அக்டோபா் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ஆழ்வாா்பேட்டை லஸ் சா்ச் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, லஸ் சா்ச் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபா் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் ஒரு வாரத்துக்கு சோதனை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
லஸ் சந்திப்பில் இருந்து லஸ் சா்ச் சாலை வழியாக டி.டி.கே சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பப்படும். இதன்படி, மாநகர பேருந்துகள் அமிா்தாஞ்சன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலை. டாக்டா் ஆா்.கே.சாலை,டி.டி.கே. மேம்பால இணைப்புச் சாலை வழியாக செல்ல வேண்டும். இலகு ரக வாகனங்கள் டி.சில்வா சாலை, தேசிகா சாலை வழியாகவும் செல்லலாம். முசிறி சுப்பிரமணியம் சாலையில் போக்குவரத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.