தூத்துக்குடி: திரேஸ்புரம் மேட்டுப்பட்டியில் கல்லால் தாக்கி முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியில் முதியவர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக வடபாகம் போலீஸாருக்கு இன்று காலையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடந்த நபர், தூத்துக்குடி தாளமுத்து நகர் ஜாகிர் உசேன் நகர் பகுதியைச் சேர்ந்த அகமது (60) என்பதும் அவர் மர்ம நபர்களால் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அகமதுவை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.