அவிநாசி: வேலாயுதம்பாளையம் ஊராட்சி கருணைபாளையம் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் அவிநாசி-மங்கலம் சாலையில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி பெரிய கருணைபாளையம், சின்ன கருணைபாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தும், பெரிய கருணைபாளையம்-சின்னக் கருணைபாளையம் சாலை, சின்னக்கருணைபாளையம்-புதுப்பாளையம் சாலை ஆகிய சாலைகள் மிகவும் பழுதடைந்து, மழைக்காலங்களில் குண்டும் குழிகளில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இச்சாலையை சீரமைக்கக் கோரி பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவிநாசி-மங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அவிநாசி காவல் துறையினர், ஒன்றிய நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் நடத்தினர். இதில் ஒரு வார காலத்திற்குள் பெரிய கருணைபாளையம்-சின்னக் கருணைபாளையம் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையடுத்து சின்னக்கருணைபாளையம்-புதுப்பாளையம் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.