
2021-2022 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சிறந்த தொழில் முனைவோர்களுக்கான விருதுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் வழங்கினார்.
மாநிலத்தில் சிறப்பாகச் செயல்படும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, இந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வங்கிகளையும் அங்கீகரித்து, ஊக்கப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கி வருகிறது.
2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான விருதுகள் 16.09.2022 அன்று தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2021-2022 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தொழில் நிறுவனங்ளின் சிறந்த தொழில் முனைவோர்களுக்கான விருதுகளை, தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் குறு, சிறு மற்றும்
நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அவர்கள் இன்று(அக்.13) கிண்டி சிட்கோ அலுவலக கூட்ட அரங்கில் 38 மாவட்டங்களை சேர்ந்த 40 தொழில் முனைவோர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இதையும் படிக்க: கேரள நரபலி விவகாரம்: உடலை சாப்பிட்டதாகக் கூறுவதை மறுக்கும் குற்றவாளிகள்
இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலர் வி. அருண்ராய் இ.ஆ.ப., தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன் இ.ஆ.ப., சிட்கோ மேலாண்மை இயக்குநர் சோ. மதுமதி இ.ஆ.ப., தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிக்கி பச்சாவ் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.