ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் ரூ.6 கோடி செலவில் மாவட்ட மைய நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கமும் இணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் முறையாக மாபெரும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையும் படிக்க.. கேரள நரபலி: தம்பதி பற்றிய அதிர்ச்சித் தகவலைச் சொல்லும் அண்டைவீட்டார்
இந்த விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு கண்காட்சியைத் துவக்கி வைத்து பேசியதாவது, தமிழக முதல்வர் கல்விக்கு முன்னுரிமை அளித்து இல்லம் தேடி கல்வி, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் நூலகங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.6 கோடி செலவில் மாவட்ட மைய நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவ மாணவிகள் நல்ல புத்தகங்களை தேடிப் படித்து வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என்றார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.