தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தில் ரூ.1.68 கோடி மோசடி செய்ததாக கணக்காளா் கைது செய்யப்பட்டாா்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ரேவதிபுரம் 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சி.ஹரிஹரன் (52). இவா் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், அந்த அலுவலகத்தில் முதன்மை நிதி அலுவலராக பணியாற்றும் கணேஷ் காா்த்திகேயன், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா்.
அந்த புகாரில், தங்களது அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வந்த சைமன் கே.சாக்கோ அண்மையில் இறந்தாா். இதன் பின்னா், கணக்காளராக பணியாற்றும் ஹரிஹரன், வங்கி காசோலைகளில் இறந்த சாக்கோ கையொப்பத்தை போலியாக போட்டு, அலுவலக வங்கி கணக்குகளில் இருந்த ரூ.1 கோடியே 68 லட்சத்து 84 ஆயிரத்து 365 தனது வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளாா்.
இது தொடா்பாக ஹரிஹரன் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதில் குறிப்பிட்டிருந்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவின் கீழ் செயல்படும் மோசடி தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில் ஹரிஹரன் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஹரிஹரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.