கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இளைஞர் சதீஷுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யபிரியா நேற்று இளைஞர் ஒருவரால் ரயில் முன் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலை காதல் காரணமாக கொலை செய்யப்பட்ட மாணவியின் மரணச் செய்தியைக் கேட்டு அவரது தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டப்பட்டுள்ள இளைஞர் சதீஷுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க | மாணவி கொலை: சதீஷுக்கு அக்.28 வரை நீதிமன்றக் காவல்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கல்லூரி மாணவி சத்யபிரியாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
கல்லூரி மாணவிகள் சுவாதி, சுவேதா, சத்யபிரியா ஆகிய மூன்று பேரும் ரயில் நிலையங்களில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதால் ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ரயில் நிலையங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.