முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய மசோதா தாக்கல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப் பேரவை வருகிற 17-ஆம் தேதி கூடுகிறது. மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். பின்னர், பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் நாள்கள் குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்.
இதையும் படிக்க | ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை: தந்தை மாரடைப்பால் மரணம்
17-ஆம் தேதி பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை (அக்.14) 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக தடை செய்வதற்கான மசோதா குறித்தும், புதிய முதலீடுகள், புதிய சட்ட மசோதாக்களுக்கு அனுமதி, பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னை தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பது குறித்தும், வடகிழக்கு பருவமமை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளது.