மத்திய அரசு எந்த இடத்திலும் இந்தி மொழி கட்டாயம் என பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தி திணிப்பு என்பது பொய். எதை வைத்து இந்தி திணிப்பு என்று போராட்டம் நடத்துகிறார்கள். அதற்கான ஆதாரம் உள்ளதா? முதல்வர் விளக்கம் கொடுக்க வேண்டும். திமுகவின் கபட நாடகம் இந்தி எதிர்ப்பு. திமுக மீது எதிர்ப்பு வந்தால் அக்கட்சியினர் இந்தி எதிர்ப்பு பற்றி பேசுவர்.
இதையும் படிக்க- ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு காஷ்மீரி பண்டிட் சுட்டுக் கொலை!
அரசுப் பள்ளியில் தமிழ்கூட கட்டாய மொழியாக மாற்றப்படவில்லை. திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளியில் கூட தமிழ் கட்டாயம் இல்லை. மத்திய அரசு எந்த இடத்திலும் இந்தி மொழி கட்டாயம் என பேசவில்லை. புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கையையே கடைபிடிக்கிறோம். ஒரு வாரத்திற்கு முன் வந்த சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை இந்த முறையும் மழையால் தத்தளிக்கும்.மழைக்காலத்திற்கான உரிய நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.