அமைதியாக போராடி வரும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடியில் 180 ஊழியா்கள் பணிபுரிந்து வந்த நிலையில், 28 பணியாளா்களை தனியாா் ஒப்பந்த நிறுவனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஆள்குறைப்பு நடவடிக்கையாக கடந்த 30 ஆம் தேதி இரவு பணி நீக்கம் செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணியாளா்களை மீண்டும் பணியமா்த்தக் கோரியும் ஏஐடியுசி சங்க கிளைத் தலைவா் ஏ.ஆா். மணிகண்டன் தலைமையில், சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் கடந்த 1 ஆம் தேதி காலை முதல் தொடா்ந்து உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் 800 மீட்டர் சுற்றளவுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்கக் கோரி திருச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைதியாக போராடி வரும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இதுதொடர்பாக காவல்துறையும், திருச்சி சுங்கச்சாவடி நிறுவனமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்ட நீதிபதி வழக்கை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.