கம்பம்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டியில் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி அணியினர் வெற்றி பெற்றனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 11 கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டி வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார், இணைச்செயலாளர் என்.ஆர்.வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் முதல்வர் ஜி.ரேணுகா முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர் எஸ்.சுசிலா வரவேற்று பேசினார்.
இறுதியாக நடைபெற்ற போட்டியில் கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி அணியினர், திண்டுக்கல் எம்.வி.எம்.அரசு மகளிர் கல்லூரி அணியினர் மோதினர், இதில் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி அணியினர் வெற்றி பெற்றனர். இரண்டாவது இடத்தை திண்டுக்கல் எம்.வி.எம்.அரசு கலை அறிவியல் கல்லூரி அணியும், மூன்றாவது இடத்தை பழநி ஏ.பி.ஏ. கல்லூரியும், நான்காவது இடத்தை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் கல்லூரி அணியினர் பெற்றனர்.
கலந்து கொண்ட அணியினரை பல்கலைக்கழக உடல்கல்வித்துறை இயக்குநர் ராஜம் வாழ்த்தி பேசினார். ஏற்பாடுகளை துணை முதல்வர் வாணி, உடற்கல்வி ஆசிரியர் சுகிர்தா, உதவியாளர்கள் முனீஸ்வரி, பேச்சியம்மாள் கல்லூரி பேராசிரியைகள் செய்திருந்தனர்.