இந்தி திணிப்பு நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்கும்: மார்க்சிஸ்ட் கண்டனம்

நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்கும் மத்திய அரசின் இந்தி திணிப்பு, பொதுநுழைவுத் தேர்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 
இந்தி திணிப்பு நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்கும்: மார்க்சிஸ்ட் கண்டனம்


நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்கும் மத்திய அரசின் இந்தி திணிப்பு, பொதுநுழைவுத் தேர்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

அக்டோபர் 14,15 தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மானம் பின்வருமாறு:

மத்தியில் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டுள்ளது. இது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்பதோடு ஒருமைப்பாட்டிற்கும் உலைவைப்பதாக அமைந்துள்ளது. இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு வகைசெய்யும் முறையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் அனைத்துப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே நடத்தப்படும் சூழல் உருவாக்கப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு குடியரசுத் தலைவரிடம் 112 பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலான பரிந்துரைகள் இந்திமொழியை திணிக்கும் முயற்சியாகவே உள்ளது. குறிப்பாக, ஒன்றிய கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும் என்றும், ஆங்கிலம் விருப்ப மொழியாக மட்டுமே இருக்கும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இந்தி பேசாத மாநில மாணவர்களை ஒன்றிய அளவிலான கல்வி நிலையங்களிலிருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் முயற்சியே இது.

மத்திய அரசின் விளம்பரங்கள் 50 ;தவீதத்திற்கு மேலாக இந்தியில் மட்டுமே இருக்கும் ஐ.நா.வுடனான தொடர்பு மொழியாக இந்தியே இருக்கும் என்பன உள்ளிட்ட அனைத்து பரிந்துரைகளும் இந்து - இந்தி - இந்துஸ்தான் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்பாட்டை திணிப்பதாகவே அமைந்துள்ளன.

மோடி அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி, கேரளம், மேற்குவங்கம், தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பாஜகவின் ஒற்றை மொழி திணிப்பை இந்தியா ஏற்காது என்பதையே இதுகாட்டுகிறது.

மருத்துவத்திற்கான நீட் தேர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து படிப்புகளுக்கும் பொதுநுழைவுத் தேர்வை புகுத்துவது என்பது அப்பட்டமான அநீதியாகும்.

சமீபத்தில் மத்திய அமைச்சகங்கள், துறைகள், அரசு நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட துறைகளில் 20 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசின் ஸ்டாப் செலக்சன் கமிசன் நியமன அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஒரு கோடி பேருக்கு மேல் விண்ணப்பிக்கும் வாய்ப்புள்ளது. இத்தேர்விற்கான கேள்வித் தாள்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழி மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில மொழிகளுக்கு இடமில்லை. இது சமவாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரானது மட்டுமின்றி, இந்தி பேசாத மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.

ஒன்றிய அரசின் இந்நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன்,

*  நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்கும் மத்திய அரசின் இந்தி திணிப்பை கைவிட வேண்டுமெனவும்,

*  அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஒன்றிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டுமெனவும்,

*  மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்திட வேண்டுமெனவும்,

* மத்திய அரசின்  தேர்வாணையத்தின் கேள்வித் தாள்களில் மாநில மொழிகளும் இடம்பெற வேண்டுமெனவும்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக அமைப்புகளும், பொதுமக்களும் போராட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com