தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது.
பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்பட்டது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தொடரில் முக்கிய அலுவல்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, இந்தி திணிப்பு குறித்து சட்டப்பேரவையில் நாளை விவாதம் எடுத்துக்கொள்ளப்படும். சட்டப்பேரவையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி கடிதம் குறித்து பேரவையில்தான் தெரிவிக்க முடியும், வெளியில் சொல்ல முடியாது. அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர் முறையில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் பங்கேற்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடியது.
இதையும் படிக்க- தமிழக சட்டப்பேரவை நாளைக்கு ஒத்திவைப்பு
கூட்டம் தொடங்கியதும் பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, முலாயம்சிங் யாதவ் உள்பட 7 பேர் மறைவுக்கு பேரவைத் தலைவா் அப்பாவு தலைமையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கோவை தங்கம் உள்ளிட்ட 10 முன்னாள் எம்எல்ஏக்களின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து பேரவைக் கூட்டத்தை நாளைக்கு ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.