சென்னை: சராசரியாக தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தலா 10 குழந்தை திருமணங்கள், கடந்த ஜனவரி - ஆகஸ்ட் மாதத்தில் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 2,516 குழந்தை திருமணங்கள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 1,782 திருமணங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. 734 திருமணங்களை நிறுத்தமுடியவில்லை என்கிறது புள்ளிவிவரம்.
மாநிலத்திலேயே, நாமக்கல், சேலம், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, திருச்சி, ஈரோடு, கடலூர் மாவட்டங்களில்தான் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாக, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் நலன் துறை வெளியிட்டிருக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக 548 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குழந்தை திருமண மற்றும் வழக்குகள் பதிவில் நாமக்கல் முதலிடத்தில் உள்ளது. சேலம், திண்டுக்கல் மாவட்டங்கள் அடுத்தடுத்து உள்ளன. குறிப்பாக அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 95 சதவீத குழந்தை திருமணங்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த முடியாமல் போகும் நிகழ்வுகளில், சில திருமணங்கள் முடிந்த பிறகுதான் தங்களுக்குத் தகவல் கிடைக்கிறது என்றும், தகவல் கிடைத்தாலும் திருமணம் நடைபெறும் இடத்தை மணமக்கள் வீட்டார் கடைசி நேரத்தில் மாற்றிவிடுகிறார்கள் என்பதும் காரணமாக அமைந்துள்ளது.