தூத்துக்குடி: காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்று 60 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமை வகித்தார். தொடர்ந்து வீரமரணம் அடைந்த காவல் துறையினருக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து மற்றும் உதவி ஆய்வாளர் நங்கையர்மூர்த்தி தலைமையில் ஆயுதப்படை போலீசார் 60 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.
இதில் தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஊரக உள்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ், விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் சத்தியராஜ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், மணியாச்சி லோகேஷ்வரன், ஸ்ரீவைகுண்டம் மாயவன், கோவில்பட்டி வெங்கடேஷ் உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் பங்கேற்றனர்.