மூடப்படாத பாதாள சாக்கடைக் குழிக்குள் விழுந்தவர் பலியானார்.
மதுரை மாநகராட்சி 2-வது வார்டுக்கு உள்பட்ட கூடல்நகர் சொக்கலிங்க நகர் 1-வது தெரு பகுதியில் நடைபெற்ற பாதாள சாக்கடைப் பணியின் போது பள்ளத்தை சரிவர மூடாத நிலையில், பள்ளத்தில் நேற்று பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியிருந்துள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் (45) என்ற நபர் அந்த வழியாக நடந்து வந்தபோது பாதாள சாக்கடை குழியில் விழுந்து நீண்டநேரமாக போராடி யாரும் இல்லாத நிலையில் மூச்சு திணறி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து இன்று காலை உயிரிழந்த நபரின் சடலத்தை எடுக்க வந்த மாநகராட்சி ஆம்புலன்சும் சகதியில் சிக்கி செல்ல முடியாத அவலம் ஏற்பட்டது
இந்நிலையில், அப்பகுதி பொதுமக்கள் சாலையை சீரமைக்க கோரியும், உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க கோரியும் பணியில் இருந்த ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு அலங்காநல்லூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: சிம்மத்துக்கு பணவரவு, உங்க ராசிக்கு: வாரப் பலன்கள்!
இதனால் அந்த பகுதி முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.