சங்ககிரி: தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னசேகவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் உள்பட நகரில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவித்து திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தீபாவளி பண்டிகையையொட்டி சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, மலையில் அடிவாரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜப்பெருமாள், சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜபெருமாள், அருள்மிகு தபால் ஆஞ்சநேயர் சுவாமிகள் உள்பட அனைத்து மூலவர் சுவாமிகளுக்கும் திங்கள்கிழமை அதிகாலை எண்ணெய் காப்பு வைத்து, சீகக்காய் தூள், பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்யபொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு புத்தாடைகள் அணிவித்து, பல்வேறு மலர்கள், வெட்டி வேர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேவசப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது.
இதையும் படிக்க | நாளை சூரிய கிரகணம்: தமிழகத்தில் மாலையில் நிகழும்
மேலும் வி.என்.பாளையம் அருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஸ்ரீவஸந்தவல்லி உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, அருள்மிகு வரதராஜபெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஆஞ்சநேயர், ஸ்ரீசக்கரம் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் உற்சவமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
சுவாமிகளை அதிகாலை முதலே பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வணங்கிச் சென்றனர்.