கம்பம்: தீபாவளி விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து வந்தனர்.
தேனி மாவட்டத்தில் புகழ் பெற்றது சுருளி அருவி. இந்த அருவியில் குளிக்க, வழிபாடுகள் செய்ய தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை புரிவார்கள்.
சுருளிமலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து ஓடைகளான அரிசிப் பாறை, ஈத்தைப்பாறைகளில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், கடந்த அக்டோபர் 20ஆம் தேதி சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில், சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்ததால் செவ்வாய்க்கிழமை குளிக்க அனுமதித்தனர். இதனால் தீபாவளி விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் ஒழுங்குப்படுத்தி வருகின்றனர்.