ஒசூர்: ஒசூரில் பள்ளியின் மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த மாணவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கட்டார்.
ஒசூர் ராயக்கோட்டை அட்கோ பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி மாலதி இவர்களுக்கு ரோகித் (12) என்ற மகன் உள்ளார். இவர் ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
தீபாவளி விடுமுறை முடிந்து வழக்கம் போல புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற ரோகித், பள்ளி தொடங்குவதற்கு முன்பு மூன்றாவது தளத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஒசூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மாணவர் படித்து வரும் இரண்டாவது தளத்திலிருந்து அவர் மூன்றாவது தளத்திற்கு நடந்து சென்றுள்ளார் மீண்டும் அவர் கீழே இறங்கி வந்துள்ளார். மீண்டும் மூன்றாவது தளத்திற்கு சென்றவர் அங்கிருந்து கீழே குதித்துள்ளார். மாணவர் எதற்காக கீழே குதித்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.