திருச்சி அருகே கார்கள் மோதி விபத்து: 4 பெண்கள் பலி

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 4 பெண்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.
திருச்சி அருகே கார்கள் மோதி விபத்து: 4 பெண்கள் பலி

திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 4 பெண்கள் பலியாகினர். 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 67). இவரது மனைவி மங்கையர்க்கரசி (வயது 64). பேரன் பிரதுன் (வயது 7), உறவினர்கள் பூஜா (வயது 20), ரஞ்சனா (வயது 20) ஆகிய ஐந்து பேரும் ஒரு காரில் ராஜபாளையத்திலிருந்து திருச்சி மாவட்டம்,  நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். 

இன்று மாலை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவந்தம்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையதடுப்பைத் தாண்டி எதிர்சாலைக்கு சென்று எதிரில் வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த இரண்டு கார்களும் விபத்துக்குள்ளான நிலையில் அந்த கார் மீது பின்னால் வந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மங்கையர்க்கரசி, ரஞ்சனா, பூஜா மற்றும் மற்றொரு காரில் சென்ற பத்மா ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் சிலர் படுகாயம் அடைந்து மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இறந்த நான்கு பேரின் உடல்களையும் பிரதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர்  அனுப்பி வைத்தனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com