தம்மம்பட்டி: உலிபுரத்தில் தனியார் பள்ளிப் பேருந்தும், தனியார் பேருந்தும் வளைவில் நேருக்கு நேர் மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் பலத்தக் காயமடைந்தனர்.
தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் பள்ளியின் பேருந்து, புதன்கிழமை மாலை 6.30 மணி அளவில் உலிபுரம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளை இறக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை பழனிச்சாமி என்பவர் ஓட்டிச்சென்றார்.
அப்போது, தம்மம்பட்டியிலிருந்து ராசிபுரம் நோக்கி, ஒரு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தை வெங்காயபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து(45),என்பவர் ஓட்டிச்சென்றார். இரண்டு பேருந்துகளும் உலிபுரத்தில், ஒரு வளைவில் ஒலிப்பான் அடிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் இருபேருந்துகளும் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. இதில் தனியார் பள்ளியின் பேருந்து ஓட்டுநர் பழனிச்சாமி(46) , தனியார் பேருந்து ஓட்டுநர் மாரிமுத்து(45) பலத்தக் காயமடைந்தனர். மேலும் தனியார் பேருந்தில் பயணித்த தண்ணீர்ப் பந்தல் தனுஷ்(20), தம்மம்பட்டி கனகவல்லி(64), நாமகிரிப்பேட்டை பாப்பாத்தி(60), ராஜபாளையம் நாகராஜ்(67), செல்லம்(60), மாதேஸ்வரி(55) உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் பலத்தக்காயமடைந்தனர்.
இதையும் படிக்க: கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை அறிவிப்பு!
காயமடைந்தவர்கள் தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆத்தூர் அரசு பொதுமருத்துவமனை உள்ளிட்டவைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தம்மம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.