செல்போனை உடைத்ததால் காதல் மனைவி தற்கொலையா? 

செல்போன் பேசிக் கொண்டிருக்கும் போது போனை பிடுங்கி கணவர் உடைத்ததால் காதல் மனைவி தற்கொலை
செல்போனை உடைத்ததால் காதல் மனைவி தற்கொலையா? 

செல்போன் பேசிக் கொண்டிருக்கும் போது போனை பிடுங்கி கணவர் உடைத்ததால் காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டு நிலையில், அடித்து கொலை செய்ததாக பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்ததை அடுத்து
துணை ஆட்சியர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், பணகுடியைச் சேர்ந்தவர் மைக்கேல் மதன் சிங். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சிநேகா என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஒன்றை வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

சிநேகா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருப்பதால் அதனை கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் பலநாள்கள் தகராறு ஏற்பட்டு கோபித்து கொண்டு தந்தை வீட்டுக்கு சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்ந்து வியாழக்கிழமை சிநேகா குழந்தையுடன் மைக்கில் மதன் சிங்கின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிநேகா போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மைக்கில் மதன் சிங் மனைவியிடம் இருந்து போனை பிடுங்கி ஆவேசமாக உடைத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சிநேகா அங்கிருந்து கிளம்பி தனது வீட்டிற்கு வந்து அறையை பூட்டிக்கொண்டு உள்ளே தூக்கிட்டு கொண்டார். அலறும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சிநேகாவை தூக்கில் இருந்து இறக்கி பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சிநேகாவின் உறவினர்கள், மைக்கேல் மதன் சிங் சிநேகாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், இன்று அடித்து கொலை செய்து விட்டதாக கூறினர். 

இதனையடுத்து போலீசார் மைக்கில் மதன் சிங்கை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து சேர்மாதேவி துணை ஆட்சியர் முகமது சபீர் ஆலம் நேரடியாக வந்து சிநேகாவின் உறவினரிடமும், தாய்-தந்தையரிடம் விசாரணை நடத்தினார். 

இறந்த சிநேகாவின் உடலில் வேறு எங்கும் காயம் இல்லை. தூக்கிட்டு கொண்ட கழுத்தில் மட்டுமே காயம் இருந்தது. இருப்பினும் பிரேத பரிசோதனைக்காக பாளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

சிநேகா செல்போனை உடைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது கணவர் கொலை செய்தாரா? என்பது குறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com