மதுரை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்ளே சென்று உண்ணாவிரதம் இருக்க முடியுமா? என்று பாஜக நிர்வாகிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய பாஜக நிர்வாகிக்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்ளே சென்று உண்ணாவிரதம் இருக்க முடியுமா? பிறகு தமிழகத்தில் உள்ள கோயில்கள் என்ன சத்திரமா? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கந்தசஷ்டி விரதம் இருக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது சரியே என்றும், கோயில் விவகாரங்களில் தமிழக அரசின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், திருப்பதியில் உள்ள நடைமுறைகள் போன்று தமிழ்நாட்டு கோயில்களிலும் மிகக் கட்டுப்பாடான நடைமுறைகளை உருவாக்க வேண்டும். கோயில் விவகாரங்களில் தமிழ்நாடு அறநிலையத் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கோயிலின் வளாகங்களில் யாகங்கள் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது. திருச்செந்தூரில் பணம் கொடுத்தால் உடனடியாக சாமி தரிசனம் செய்ய முடியும். சாமி பணக்காரர்களுக்கானது அல்ல என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் யாகங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தேவையில்லாத நடைமுறைகளைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.