திருச்சி: வனத்துறை உயரதிகாரிகள் வராததால் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனச்சரகர்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்கமாக இக் கூட்டத்தில் வனத்துறை உயரதிகாரிகள் பங்கேற்பதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை (அக்.28) கூட்டத்திலும் வனத்துறை உயரதிகாரிகள் பங்கேற்கவில்லை. கூட்டம் தொடங்கியவுடன் உதவி வனப்பாதுகாவலர் வந்துள்ளாரா என ஆட்சியர் கேள்வி எழுப்பினார். கூட்டத்தில் அமர்ந்திருந்த வனச்சரகர்கள் எழுந்து அமைதியாக நின்றனர்.
இதையடுத்து அதிருப்தி அடைந்த ஆட்சியர் மா. பிரதீப் குமார், கடந்த கூட்டத்திலேயே உதவி வனப்பாதுகாவலர் வர வேண்டும் என கூறியிருந்தேன். ஏன் வரவில்லை. வெளியே பேகலாம் என வனச்சரகர்களை பார்த்து கூறினார்.
இதற்கு விவசாயிகள் பலத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் தெரிவித்தனர். இதனால் குறைதீர் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.