சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் மூலம் இந்த ஆண்டு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.82.24 கோடிக்கு ஆவின் நிறுவனத்தில் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.116 கோடியாக இது அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க.. சென்னைக்கு சம்பவம் காத்திருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது, ஆவின் நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நெய், வெண்ணெய், பால்கோவா, மைசூா்பாகு, பால் கேக், நெய் அல்வா, குலோப் ஜாமூன், ரசகுல்லா போன்ற இனிப்பு வகைகள் தரமாகவும், சுவையாகவும் விற்பனை செய்தது. மேலும், இந்த காலங்களில் ரூ.200 கோடிக்கு இனிப்பு விற்பனை செய்ய இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது.
ஆவின் ஏற்கெனவே, 215 வகை பால் பொருள்களை உற்பத்தி செய்து வந்த நிலையில், கடந்த மாா்ச் மாதம் வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய பால் உபபொருள்கள் சென்னை அம்பத்தூா் மற்றும் ஊட்டியிலுள்ள பால் பண்ணைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
10 புதிய பால் உபபொருள்கள் விவரம்: பலாப்பழ ஐஸ்கிரீம் 125 மி.லி. ரூ. 45 வெள்ளை சாக்லேட் 45 கிராம் ரூ.30, குளிா்ந்த காஃபி 200 மி.லி. ரூ.35 வெண்ணெய் கட்டி 200 கிராம் ரூ.130 பாஸந்தி 100 மி.லி. ரூ.60, ஆவின் ஹெல்த் மிக்ஸ் 250 கிராம் ரூ.120, பாலாடைக்கட்டி 200 கிராம் ரூ.140, அடுமனை யோகா்ட் 100 கிராம் ரூ.50, ஆவின் பால் பிஸ்கட் 75 கிராம் ரூ.12 ஆவின் வெண்ணெய் முறுக்கு 200 கிராம் ரூ.80.